கேலாங்கில் காரும் சைக்கிளும் மோதிகொண்ட விபத்தில், சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அந்த விபத்து, சிம்ஸ் வே சாலைக்கும் கேலாங் சாலைக்கும் இடையே இருக்கும் சந்திப்பில் ஏப்ரல் 7ஆம் தேதி இரவு நடந்தது.
அதுகுறித்துத் தங்களுக்கு அன்றைய தினம் இரவு 10.10 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
விபத்தில் சிக்கிய 30 வயது சைக்கிளோட்டி, டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
73 வயது கார் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.
‘எஸ்ஜி ரோடு விஜிலான்டே’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவான இந்த விபத்து தொடர்பான காணொளியில், சைக்கிளோட்டி ஒருவர் சிம்ஸ் வே சாலையைக் கடப்பதைக் காண முடிந்தது.
மேலும், கேலாங் சாலையிலிருந்து சிம்ஸ் வே சாலையை நோக்கி வலதுபுறமாகத் திரும்பிய கார் ஒன்று சைக்கிளோட்டிமீது மோதுவதையும் மோதிய வேகத்தில் அவர் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்படுவதையும் அதில் காணலாம்.
இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

