ஜாலான் சுல்தானில் சனிக்கிழமை (ஜனவரி 31) நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநரும் நான்கு பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அன்று பிற்பகல் 3.30 மணியளவில், காலாங் சாலையை நோக்கிச் செல்லும் விக்டோரியா ஸ்திரீட் சந்திப்பில் பேருந்தும் வேனும் மோதி விபத்துக்குள்ளானது குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்து தொடர்பாக வேனை ஓட்டிய 31 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
பேருந்தை ஓட்டிய 28 வயது பெண்ணும் 45 முதல் 82 வயதுக்குட்பட்ட நான்கு பேருந்துப் பயணிகளும் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
ஷின் மின் நாளிதழின் செய்தியின்படி, மோதிய வேகத்தில் பேருந்தின் வலதுபுற முகப்பு விளக்கு சேதமடைந்ததுடன், முன்பக்கக் கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்து சிதறியது. விபத்து நடந்த இடத்தில் வாகனத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்தன.

