சனிக்கிழமை காலை (ஜனவரி 24ல்) காருக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையே விபத்து ஏற்பட்டதை அடுத்து அதில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மரினா கரையோர விரைவுச்சாலையை (MCE) நோக்கிச் செல்லும் காலாங் பாயா லேபார் விரைவுச்சாலையில் (KPE), காலை 11.40 மணிக்கு நடந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் பாதிக்கப்பட்ட 35 வயது ஆடவர், சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காலாங் பாயா லேபார் விரைவுச்சாலையின் (KPE) ஆக இடதுபுறம் உள்ள தடத்தில், வெள்ளை நிறக் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதுவதைக் காணொளிப்பதிவு ஒன்று காட்டுகிறது.
தரையில் தள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் பொருள்கள் சாலையில் சிதறிக் கிடந்ததும் அந்தக் காணொளியில் தென்பட்டது.
34 வயது கார் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

