பிரான்சைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சனோஃபி, முகப்பருக்கான தடுப்பூசி மருந்தைத் தயாரித்துள்ளது.
அதற்கான மருத்துவச் சோதனைகள் முதன்முறையாக நடத்தப்படும் இடங்களில் சிங்கப்பூரும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக முகப்பருவுக்குத் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அந்தத் தடுப்பூசி தொடர்பில் ஆய்வு நடத்தவும் சிறிதளவு முகப்பருப் பிரச்சினை இருப்போரைக் கொண்டு அதற்கான ஆரம்பகட்ட மருத்துவச் சோதனை நடத்தவும் கடந்த வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 22) சனோஃபி, ஏ-ஸ்டார் எனும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு, தேசிய தோல் சிகிச்சை நிலையம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.
2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் அச்சோதனையில் பங்கேற்க சுமார் 200 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மோசமான முகப்பருப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கான சோதனை அமெரிக்காவில் தொடங்கிவிட்டது.
முகப்பருப் பிரச்சினை, பொதுவாக பதின்ம வயதினர் 10ல் எட்டு பேரைப் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரச்சினை மோசமாகாமல் தடுக்கும் நோக்குடன் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியைக் கொண்டு முகப்பருப் பிரச்சினையைக் குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.
‘எக்ஸீமா’ (eczema) எனப்படும் தோல் வெடிப்புப் பிரச்சினையை எதிர்கொள்ளும் நோயாளிகளைத்தான் தேசிய தோல் நிலையம் ஆக அதிக எண்ணிக்கையில் கவனித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக முகப்பருப் பிரச்சினையை எதிர்நோக்கும் நோயாளிகளுக்கு அந்நிலையம் சிகிச்சை அளித்து வருகிறது.

