சிங்கப்பூரில் வேலைசெய்யும் இல்லப் பணிப்பெண்களுக்குக் கட்டாய விடுப்பு கொடுக்காததற்காக ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 90 முதலாளிகள் பிடிபடுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு மாதந்தோறும் இல்லப் பணிப்பெண்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்கப்படவேண்டும் என்ற கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது.
அத்தகையோருக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும்.
பிடிபட்ட முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்து டாக்டர் டான் நாடாளுமன்றத்தில் விவரிக்கவில்லை. ஆனால், வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் சட்டத்தின்கீழ் தவறு செய்யும் முதலாளிகளுக்கு $10,000 வரை அபராதம், அதிகபட்சம் ஓராண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான முதலாளிகள் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதாக டாக்டர் டான் சொன்னார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 316,900 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் இருந்தனர். 2020ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 247,400ஆக இருந்தது.
அந்த விகிதத்துடன் ஒப்புநோக்க ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான முதலாளிகள் ஒவ்வோர் ஆண்டும் விதிமுறைகளை மீறுகின்றனர் என்றார் டாக்டர் டான்.

