இணையவழிப் பொய்ச் செய்தி, சூழ்ச்சித்திறத்திற்கு எதிரான பாதுகாப்புச் சட்ட (பொஃப்மா) உத்தரவுக்கு இணங்கத் தவறிய குற்றத்திற்காக கோகிலா அண்ணாமலை மீது ஏப்ரல் 23 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலரான 37 வயது கோகிலா, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமது ஃபேஸ்புக், எக்ஸ் சமூக ஊடகத்தில் சில பதிவுகளை வெளியிட்டார்.
அதில், அரசாங்கம் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மரண தண்டனைகளை முடிவு செய்கிறது, நிறுத்தி வைக்கிறது என்றும், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றத்தை மெய்ப்பிக்கும் சட்டபூர்வ பொறுப்பு அரசிடம் இல்லை என்றும் கோகிலா தமது பதிவுகளில் குறிப்பிட்டிருந்ததாக பொஃப்மா அலுவலகம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்தத் தகவல்கள் தவறானவை எனக் குறிப்பிட்ட பொஃப்மா அலுவலகம், கடந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி அப்பதிவுகளில் திருத்த அறிவிப்புகளை வெளியிடுமாறு கோகிலாவுக்கு உத்தரவிட்டது.
நியாயமான காரணமின்றி அந்த உத்தரவை கோகிலா நிறைவேற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகிலா மீதான வழக்கிற்கு முந்திய விசாரணை மே 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகப்பட்சமாக $20,000 அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

