‘ஏஐ’ பயன்படுத்துவதில் அவநம்பிக்கை நிலவினால் சுகாதாரத் துறைக்கு அது பயனளிக்காது: ஓங் யி காங்

‘ஏஐ’ பயன்படுத்துவதில் அவநம்பிக்கை நிலவினால் சுகாதாரத் துறைக்கு அது பயனளிக்காது: ஓங் யி காங்

2 mins read
8809ca6a-8bcc-4dbe-b078-227273c9afb6
சிங்கப்பூரில் நாட்பட்ட நோய்களுக்கான மருத்துவ முடிவுகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், ‘ஏஐ’ கருவிகளை ‘சிம்ஃபொனி’ உருவாக்குகிறது. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

அமைப்புமுறைகளைப் பயிற்றுவிக்க, ரகசியமாக்கப்பட்ட தரவுகள் உட்பட ஒவ்வொரு தரவுக்கும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் நோயாளிகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு தோல்வியில் முடிந்துவிடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியிருக்கிறார்.

புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நாடாளுமன்றத்தில் பேசிய திரு ஓங், ஏஐ பயன்பாடு வெற்றிபெறுவதற்கான சாத்தியம் இல்லாமல் போய்விடும் என்று கூறினார்.

சிங்கப்பூர் மருத்துவ அறநிறுவனத்தின் ஏஐ மாதிரியை (சிம்ஃபொனி) உருவாக்க, நோயாளிகளின் எத்தகைய தரவுகள் பயன்படுத்தப்படும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒப்புதல் பெறப்படுமா என்று தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரே லோ கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

‘சிம்ஃபொனி’ கடந்த ஜூலை 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

‘ஏஐ’ பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் தரவுகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதன் மூலம், நீரிழிவு, உயர் ரத்தக் கொழுப்பு, கண் நோய்கள் போன்றவற்றை மேம்பட்ட வழியில் கண்டறிய மருத்துவர்களுக்கு உதவுவதே ‘சிம்ஃபொனி’யின் நோக்கம்.

இன்று சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ‘ஏஐ’ மாதிரிகள், மேற்கத்திய நாடுகளின் மக்கள்தொகைகளை அடிப்படையாகக் கொண்ட தரவுகளை வைத்து மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன.

இது சிங்கப்பூரின் மருத்துவச் சூழலில் அவற்றின் துல்லியத்தைக் குறைக்கக்கூடும்.

அமைப்புமுறையை முற்றிலும் நம்பாமல் இருப்பதற்கு எதிராக எச்சரித்த திரு ஓங், ஒரு சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், அதிகரித்துவரும் நோயாளிகளின் எண்ணிக்கையோடு, மூப்படையும் ஊழியரணியையும் மக்கள்தொகையையும் சிங்கப்பூர் எதிர்கொண்டுவருகிறது.

அதன் தொடர்பான சவால்களைக் கையாள, செயற்கை நுண்ணறிவு உதவக்கூடும் என்றார் திரு ஓங்.

“அவ்வாறு செய்ய, நம்மிடம் உள்ள தரவுகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்,” என்று கூறிய திரு ஓங், இதுவரை தரவுக் கசிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்