தனது கட்சிக்காரரை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு 800 வெள்ளி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட, நடப்பில் இல்லாத வழக்குப் பதிவு ஒன்று அந்த வழக்கறிஞரின் நீதிமன்ற ஆவணங்களில் இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அந்தத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
‘டிஎல் லா கார்ப்பரேஷன்’ சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த லால்வானி அனில் மாங்கன், அந்தப் போலி வழக்கைத் தன்னிடம் பணியாற்றும் இளம் வழக்கறிஞர் பயன்படுத்தியதாகக் கூறினார். அந்த இளம் வழக்கறிஞர், செயற்கை நுண்ணறிவுச் செயலி ஒன்றின் மூலம் அவ்வழக்கை ‘ஆராய்ந்திருப்பார்’ என்றும் திரு லால்வானி சொன்னார்.
திருவாட்டி சுரையா ஹாஜா மைதீனன் என்பவருக்கு எதிரான உரிமையியல் வழக்கில் திரு லால்வானி, தாஜுதின் குலாம் ராசுல், முகம்மது கோஸ் தாஜுதீன் ஆகியோரைப் பிரதிநிதித்தார்.
இவ்வழக்கில் 11 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வெளியிட்ட துணைப் பதிவாளர் டான் யு சிங், இதுபோன்ற தவறான நடத்தை அதிக மதிப்புமிக்கதாய் இருக்கும் நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பதுடன் சம்பந்தப்பட்ட வளங்கள் தேவையின்றி வீணடிக்கப்படுவதாகவும் சாடினார்.