அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 265 கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தியத் தலைவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
திரு வோங், இந்தத் துயரச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் மிகுந்த வருத்தத்துக்கு ஆளானதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் மரணமடைந்தோர் குடும்பத்தார் மற்றும் அன்புக்குரியவர்களுக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.
திரு வோங்கின் கடிதத்தை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிட்டது.
அதேபோல் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குக் கடிதம் அனுப்பினார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களையும் இந்திய மக்களுக்கும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக டாக்டர் விவியன் தமது கடிதத்தில் தெரிவித்தார்.
போயிங் 787 டிரீம்லைனர் வகை ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த ரமேஷ் விஸ்வேஷ்குமார் என்பவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.