ஃபிஷரி போர்ட் ரோட்டில் உள்ள கட்டடங்களில் திங்கட்கிழமை (ஜூன் 29) அமோனியா வாயுக் கசிவு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எண் 11, ஃபிஷரி போர்ட் ரோட்டிலிருந்து உதவி கேட்டு திங்கட்கிழமை காலை 11.45 மணியளவில் அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வளாகத்திற்குள் அமோனியா கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்தோர் வெளியேற்றப்பட்டனர். ஐஸ்கட்டிகளை விநியோகிக்கும் ஜூரோங் மரின் கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனம் அங்குச் செயல்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஃபிஷரி ரோட்டில் உள்ள எண்.9, எண்.15 ஆகியவற்றில் அமைந்துள்ள கட்டடங்களில் இருந்தோரும் வெளியேற்றப்பட்டனர்.
ஆபத்தான பொருள்களைக் கையாளும் ‘ஹஸ்மட்’ வல்லுநர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று தடுப்புப் பணிகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
வளாக அறையொன்றில் இருக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். அதற்கு வாயுவைக் கொண்டுசெல்லும் குழாய் அடைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் அமோனியா வாயுக் கசிவால் ஏற்பட்ட நெடியின் தீவிரம் தணிந்திருப்பதாக அண்மைத் தகவல்கள் கூறுகின்றன.
அமோனியா வாயுவைச் சுவாசித்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அந்த வட்டாரத்தைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்குக் குடிமைத் தற்காப்புப் படை ஆலோசனை கூறியுள்ளது.

