அங் மோ கியோவில் நேர்ந்த சாலை விபத்தில் காயமடைந்த 74 வயது நடையர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாகக் கூறி, 33 வயது காரோட்டி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அவ்விபத்து தொடர்பில் சனிக்கிழமை (மார்ச் 28) இரவு மணி 7.05க்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
அங் மோ கியோ அவென்யூ 6ஐ நோக்கிச் செல்லும் அங் மோ கியோ ஸ்திரீட் 31ல் அவ்விபத்து நேர்ந்தது.
கார் மோதியதால் காயமுற்ற மூதாட்டி நினைவிழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.
விபத்து தொடர்பிலான படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அதில், ஒருவர் சாலை நடுவே கிடப்பதும் அவருக்கு அருகில் அவசர மருத்துவ வாகனம் இருப்பதும் தெரிகிறது.
விபத்துக் குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

