அங் மோ கியோ வட்டாரத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) தீச்சம்பவம் நிகழ்ந்தது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 11 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் தொடர்பில் பதின்ம வயது ஆடவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அறிக்கையில் தெரிவித்தனர்.
தீ சம்பந்தப்பட்ட குறும்புச் செயலில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். ஒருவருக்கு வயது 16, மற்றொருவரின் வயது 17.
இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 8.25 மணிக்கு முன்பு அங் மோ கியோ அவென்யூ 8 புளோக் 510ல் நிகழ்ந்தது. புளோக்கின் ஏழாவது தளத்தில் மின்தூக்கி ஏறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம், சைக்கிள்கள் ஆகியவை இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.
இரவு 8.30 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
தீயினால் மின்தூக்கி ஏறும் இடத்துக்கு அருகே இருந்த அறைகலன்களும் தீயினால் பெரிதும் சேதமடைந்தன.
முனனெச்சரிக்கை நடவடிக்கையாக புளோக்கில் இருந்த சுமார் 90 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒன்றரையிலிருந்து 85 வயதுக்கு உட்பட்ட 11 பேர் புகையை நுகர்ந்த காரணத்துக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.