சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய அவசரகால சேவைப் பிரிவினர், தங்களின் பயன்பாடு முடிந்த தீயணைப்புக் குழாய்களைக் கொண்டு ‘நைட் சஃபாரி’ தோட்டத்துக்கு (Night Safari) விலங்குகளுக்காக நான்கு சொகுசு ஊஞ்சல்களை (Hammocks) உருவாக்கி அசத்தியுள்ளனர்.
2026 ஜனவரியில் ஜப்பானின் ஒசாகா உயிரியல் பூங்காவில் குரங்குகள் பழைய தீயணைப்புக் குழாய்களில் விளையாடுவதைக் கண்ட திரு ஜஸ்டின் ஓங் என்ற சாங்கி விமான நிலையக் குழுமத்தின் அவசர சேவைப் பிரிவின் மூத்த அதிகாரிக்கு இந்தச் சிறப்பான எண்ணம் தோன்றியது.
இதனைத் தொடர்ந்து, சாங்கி, சிலேத்தார் விமான நிலையங்கள், ராணுவ விமானத் தளங்களிலிருந்து ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட பழுதடைந்த தீயணைப்புக் குழாய்கள் சேகரிக்கப்பட்டன.
15 முதல் 20 ஆண்டுகள் பழமையான இந்தத் தடிமனான குழாய்களை வெட்டி, ‘கெத்துபாட்’ (Ketupat) எனப்படும் பாரம்பரியமாகத் தென்னை ஓலைகளைப் பின்னுவது போன்ற நேர்த்தியான முறையில் அவற்றைப் பின்னி, எஃகு கட்டமைப்புகளுடன் இணைத்து இந்த ஊஞ்சல்கள் உருவாக்கப்பட்டன.
சாங்கி விமான நிலையத்தின அவசர சேவைப் பிரிவைச் சார்ந்த ஏறத்தாழ 20 தன்னார்வலர்கள் நான்கு மணி நேரம் உழைத்து இவற்றை வடிவமைத்துள்ளனர்.
மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பராமரிப்பில் உள்ள ஆசிய சிங்கங்கள், ஓராங் ஊத்தான் குரங்கினங்கள் தற்போது இந்த ஊஞ்சல்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
விலங்குகளின் பற்கள், நகங்களின் பாதிப்புகளைத் தாங்கும் வகையில் இந்தக் குழாய்கள் வலிமையாக இருப்பதால், அவை சிறந்த தேர்வாக அமைந்தன.
விலங்குகளுக்கு மகிழ்ச்சி தரும் தீயணைப்புக் குழாய்கள்
“உயிர்களைக் காக்கப் பயன்படுத்தப்பட்ட இந்தக் குழாய்களுக்கு தற்போது விலங்குகளின் மகிழ்ச்சிக்காகப் பயன்படும் வகையில் அர்த்தமுள்ள இரண்டாவது பயன் கிடைத்துள்ளது,” என இந்த முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னரும் சாங்கி விமான நிலையக் குழுமம் தீயணைப்புக் குழாய்களைக் கொண்டு பணப்பைகள், கிறிஸ்துமஸ் மரங்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

