சிறப்புத் தேவை உடையோரையும் முதுமைக்கால மறதிநோய் போன்ற பிரச்சினை உள்ளோரையும் கண்காணிக்க உதவும் கருவி சிங்கப்பூரில் அறிமுகம் காணவுள்ளது.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரையில் முதற்கட்டமாக 500 கருவிகள் அவற்றுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு வழங்கப்படவுள்ளன. அக்கருவிகள் சிறப்புத் தேவை உடையோர் அல்லது மறதிநோய் உள்ளோர் காணாமல்போனால் அவர்கள் இருக்கும் இடங்களை அடையாளம் கண்டுபிடிக்க உதவும்.
தேவை உடையோரின் பராமரிப்பாளர்கள் திங்கட்கிழமை (மார்ச் 9) முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ‘ரியாக்ட் கேர்டெக்’ (REACT CareTag) என்ற திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்து கருவிகளைப் பெறலாம்.
இத்திட்டம் ‘ஆக்டிவ் இன்டரெக்டிவ்’ எனும் உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் மூத்த வழக்கறிஞர் பெகி யீக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முயற்சியாகும்.
கருவிகளைப் பயன்படுத்த விரும்புவோருக்கு நிபந்தனை உண்டு. பதிவு செய்யப்பட்ட அற நிறுவனம், சமூக மன்றம், மருத்துவ அல்லது சமூகப் பணியாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் விண்ணப்பதாரர்களுக்கென பரிந்துரை செய்யவேண்டும்.
திட்டத்தை முன்னெடுத்துள்ள திருவாட்டி யீ, நெடுங்காலமாக மனநோய் பாதித்த பலரின் நலனுக்கென 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு நற்றொண்டாற்றி வருகிறார்.
சமூகத்துக்கு மெச்சத்தகு சேவையாற்றியோருக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்யும் இவ்வாண்டின் ‘சிறந்த சிங்கப்பூரர் விருது’க்கான இறுதிப் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

