இவ்வாண்டு பிற்பகுதியில் தானியங்கித் தடங்களைப் பயன்படுத்த அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவிருக்கும் நிலையில், சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும்கூட சில தடங்கள் ஒதுக்கப்படவுள்ளன.
தற்போதுள்ள செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதமாக ஒதுக்கப்படவிருக்கும் அத்தகைய தடங்களின் எண்ணிக்கை நீக்குப்போக்கான முறையில் மாற்றப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.
இவ்வாண்டின் பிற்பாதியிலிருந்து குடியுரிமையைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்து வெளிநாட்டவர்களும் ஆகாய, நில, கடல் சோதனைச்சாவடிகளில் தானியங்கித் தடங்களைப் பயன்படுத்தலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
அவர்கள் முன்கூட்டியே தடங்களைப் பயன்படுத்த பதிவு செய்யவேண்டியதில்லை. சிங்கப்பூரை விட்டு வெளியேறும்போது அவர்கள் தங்களின் கடப்பிதழ்களைக் காட்டவேண்டியதும் இல்லை.
தற்போது சிங்கப்பூர் குடியிருப்பாளர்களும் 60 வெளிநாட்டு அதிகார வரம்புக்குட்பட்ட கடப்பிதழ்களைக் கொண்டவர்களும் மட்டுமே தானியங்கித் தடங்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழையலாம்.