மத்திய கிழக்கில் தொடரும் பூசலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என்று சிங்கப்பூரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோர் பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அந்தந்த வெளியுறவு அமைச்சுகள் விடுக்கும் பயண ஆலோசனை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுமாறும் சிங்கப்பூரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மத்திய கிழக்கில் பதற்றநிலை மோசமடைவதே இந்த அறிவுரை வழங்கப்படுவதற்கான காரணம் என்று முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராகிம் கூறினார். இணைப் பேராசிரியர் ஃபைஷால், புதன்கிழமை (ஜூன் 25) சாங்கி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஹஜ்ஜுப் பயணம் மேற்கொண்ட 43 யாத்திரிகர்கள் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23) சவூதி அரேபியாவின் ஜெடா நகரிலிருந்து ஸ்கூட் விமானத்தில் சிங்கப்பூர் திரும்பவிருந்தனர். விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக இணைப் பேராசிரியர் ஃபபைஷால் தெரிவித்தார்.
பின்னர் மலேசிய ஏர்லைன்ஸ் மூலம் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விமானம் புதன்கிழமை சிங்கப்பூர் வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.