எம்ஆர்டி ரயில் நிலையத்திலும் ரயிலிலும் பாவாடைக்குள் படமெடுக்க முயன்றதாக நம்பப்படும் ஆடவரைப் பிடிக்க உதவிய பெண்கள் இருவருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
திருவாட்டி யசோதா பாலகிருஷ்ணன், 39, திருவாட்டி டான் லி நியான், 32, ஆகிய இருவருக்கும் ‘சேஃபர்எஸ்ஜி பப்ளிக் ஸ்பிரிடெட்னஸ்’ விருது (பிஎஸ்ஏ) வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்புத் தளபத்தியம் (டிரான்ஸ்காம்) அவ்விருதுகளை வழங்கியது.
பாலியல் குற்றவாளி என்று நம்பப்படுபவரைப் பிடிக்க உதவிய துணிகரச் செயலுக்காக அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து, கேளிக்கை கூடங்கள் ஆகியவற்றில் மானபங்கச் செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறை வெளியிட்ட குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களில் தெரியவந்தது. அந்தப் புள்ளிவிவரங்கள் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
‘வேடிக்கை பார்க்காதீர்கள்! சம்பவங்களை அடையாளம் காணுங்கள். புகாரளியுங்கள்’ என்ற ஓராண்டுகால இயக்கத்தைக் காவல்துறை கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. விழிப்புடன் இருந்து, பாலியல் குற்றம் குறித்து தெரியவந்தால் அதுபற்றி அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு சம்பவங்களை நேரில் காண்போரை ஊக்குவிப்பதே அந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

