சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த இண்டிகோ விமானம் பயணிகளை இறக்கிவிட்டபின் அவர்களது பயணப்பைகளை இறக்காமலேயே அடுத்த பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்குக் கிளம்பியது.
ஒன்றரை மணி நேரம் வானில் பறந்த பிறகு பின்னர் மீண்டும் அது சாங்கி விமான நிலையத்திற்கே திரும்பியது.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை காலையில் நிகழ்ந்தது.
6E-1006 என்ற அவ்விமானம் புதன்கிழமை அதிகாலை 5.35 மணிக்குச் சாங்கி விமான நிலையத்திலிருந்து கிளம்பியதையும் பின் மீண்டும் 6.57 மணிக்கு அதே விமான நிலையத்தில் தரையிறங்கியதையும் விமானச் சேவைக் கண்காணிப்பு இணையத்தளங்கள் காட்டுகின்றன.
பின்னர் அவ்விமானம் காலை 10.12 மணிக்குக் கிளம்பி, இந்திய நேரப்படி 11.44 மணிக்கு பெங்களூரைச் சென்றடைந்தது.
இக்குழப்பம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் ஓர் அறிக்கை மூலம் விளக்கமளித்தது.
“சிங்கப்பூர்-பெங்களூரு இடையிலான 6E-1006 விமானச் சேவையின்போது, பயணப்பை தொடர்பில் தவறு நிகழ்ந்துவிட்டது. அதன் காரணமாக அவ்விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிச் சென்றது. பயணிகளுக்கு அதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. இந்தத் தவற்றால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவ்வறிக்கையில் இண்டிகோ தெரிவித்திருந்தது.
ஆயினும், விமான நிறுவனத்தின் இத்தவற்றால் பயணிகள் சிலர் கொதிப்படைந்தனர்.
“படுமோசமான நிர்வாகக் கோளாறு! பயணப்பை குளறுபடியால் சிங்கப்பூர்-பெங்களூரு விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் பறந்தபின் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. அதிகாலையில் புறப்பட்டதால் ஏற்கெனவே போதிய உறக்கமின்றி இருந்த பயணிகள், இதனால் மேலும் துன்பத்திற்கு ஆளாயினர்,” என்று அதில் பயணம் செய்த ஒருவர் டுவிட்டர் வழியாக தமது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் லண்டனிலிருந்து மும்பை திரும்பிய முதிய தம்பதியரை இண்டிகோ நிறுவனம் இணைப்பு விமானத்தில் ஏற்ற மறந்ததால் அவர்கள் 24 மணி நேரம் துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்திலேயே அவதிப்பட நேர்ந்தது நினைவுகூரத்தக்கது.