சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல, தடையற்ற பாதைகளைக் காட்டும் புதிய அம்சம் ‘ஒன்மேப்’ செயலியில் சேர்க்கப்படவிருக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அது செயலியில் சேர்க்கப்படும்.
இத்தகைய பாதைகளை சிங்கப்பூர் நில ஆணையம் காட்டுவதன் மூலம் சக்கர நாற்காலியில் உள்ளோருக்கான இணைப்புப் பாதைகள், நடைபாதைகள், சரிவுப்பாதைகள், சாலைச் சந்திப்புகள், மின்தூக்கி வசதி உள்ள மேம்பாலங்கள் போன்றவற்றைப் பயனாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.
புக்கிட் மேரா, அங் மோ கியோ, ஆர்ச்சர்ட், ரிவர் வேலி, மரினா சவுத், அரும்பொருளக வட்டாரம், பொங்கோல், சிங்கப்பூர் ஆறு, தங்ளின் ஆகிய சிங்கப்பூரின் ஒன்பது வட்டாரங்களை உள்ளடக்கும் ஏறத்தாழ 1,100 கிலோமீட்டர் பாதைகள் இவ்வாறு செயலியில் வரைபடமாக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலிப் பயனாளர்களுக்கு, திசைகளை ஒலிவடிவமாகவும் செயலி வழங்குகிறது. சாலைச் சந்திப்புகளை நெருங்கும்போது அதுகுறித்து பயனாளர் அறிந்துகொள்ள இது உதவும்.
ஆணையம் 2023ஆம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை நான்கு முன்னோட்டச் சோதனைப் பயிற்சிகளை ‘எஸ்ஜி எனேபல்’ அமைப்புடன் இணைந்து நடத்தியது.
இதில் 100க்கும் அதிகமான சக்கர நாற்காலிப் பயனாளர்கள் பங்கேற்றுத் தங்களின் கருத்துகளையும் மேம்பாட்டுக்கான வழிகளையும் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் மேலும் அதிகமான இடங்களை உள்ளடக்கும் நோக்கில் தடையற்ற பாதைகளைப் பொதுப் போக்குவரத்திலும் விரிவுபடுத்தும் திட்டத்துக்காக ஆணையம் தற்போது எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துடன் செயலாற்றி வருகிறது.