காசநோய்ப் பரவலுடன் தொடர்புடைய பிடோக் சென்ட்ரலில் உள்ள உணவங்காடி நிலையம், சந்தையில் தற்போது தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அப்பணிகள் நிறைவடைந்த பின்னரும் வாடிக்கையாளர்களின் வருகை குறைவாகவே இருக்கும்பட்சத்தில், அங்குள்ள வர்த்தகர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படலாம்.
மே 17ஆம் தேதி முதல் புளோக் 216 பிடோக் உணவங்காடி நிலையம், சந்தையில் மூன்று நாள் தூய்மைப்படுத்தும் பணியை ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் தொடங்கியது.
அதில், ஜூன் மாதத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த வழக்கமான காலாண்டுச் சந்தை துப்புரவுப் பணியும் மேம்படுத்தப்பட்ட தூய்மைப் பணியும் அடங்கும்.
இந்த உணவங்காடி நிலையமும் சந்தையும் மே 20ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
தொற்றுநோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு மே மாதத் தொடக்கத்தில் பேரளவிலான மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
காசநோய் பரவக்கூடிய சாத்தியமிருந்ததாக இந்த அமைப்பால் அடையாளம் காணப்பட்ட மூன்று முக்கிய இடங்களில் பிடோக் சென்ட்ரல் உணவங்காடியும் ஒன்றாகும்.
தூய்மைப் பணிகளைச் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் திங்கட்கிழமை (மே 18) பார்வையிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தத் தீவிரத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், இங்குத் தொடர்ந்து வருபவர்களுக்கும் உணவங்காடி கடைக்காரர்களுக்கும் இது பாதுகாப்பான இடம் என்ற ஆழமான நம்பிக்கையையும் மனநிறைவையும் தரும் என நாங்கள் கருதுகிறோம்,” எனத் தெரிவித்தார்.

