கூகல், மெட்டா போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி வந்த 41 வயது ஜெகன் ராஜேந்திரம், தற்போது தமது இரண்டு, நான்கு வயது மகள்களை முழுநேரமாக கவனித்துக்கொள்ளும் (Stay-at-home dad) குடும்பத் தந்தையாக மாறியுள்ளார்.
தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர் சந்திப்பு, அலுவலக அழைப்புகள் என்று பரபரப்பாக இருந்த ஜெகனின் வாழ்க்கை, தற்போது முற்றிலும் மாறியுள்ளது.
காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்துவது, அவர்களை அழைத்துச் செல்வது, சிற்றுண்டி தயாரிப்பது, மாலையில் அவர்களுடன் விளையாடுவது என்று பிள்ளைகளுடன் அவருக்கு நேரம் கழிகிறது.
குழந்தைகளைப் பராமரிப்பதற்காக வேலையிலிருந்து விலகும் ஆண்களின் எண்ணிக்கை 2022ல் 3.5 விழுக்காடாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 7.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று மனிதவள அமைச்சின் 2025ஆம் ஆண்டு தரவுகள் சுட்டின.
“என் வேலை நல்ல வருமானத்தைத் தந்தாலும், அது எனது முழு நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது. பிள்ளைகள் வளரும் இந்த பொன்னான காலத்தை நான் இழக்க விரும்பவில்லை,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார் ஜெகன்.
இந்த முடிவை எடுப்பதற்கு முன், வழக்கறிஞரான 37 வயது மனைவி சம்யுதா சிவமணியுடன் இணைந்து எட்டு மாதங்கள் ஆலோசித்துள்ளார்.
வேலையை விட்டதும், தனது அடையாளத்தை இழப்பது போன்ற கவலைகள் ஜெகனுக்கு தொடக்கத்தில் இருந்தாலும், தற்போது தமது நேரத்தை பயனுள்ள வகையில் நிர்வகித்து வருகிறார்.
பிள்ளைகள் பள்ளியில் இருக்கும்போது, இணைய வகுப்புகளில் தமது தாய்மொழியான தமிழைப் படிக்கிறார். இன்ஸ்டகிராமில் தகவல் உருவாக்குநராக, தமது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
பிள்ளைகளுக்குத் தலைபின்னி விடும் திரு ஜெகன், கடந்த ஏப்ரல் மாதம், தமது குடியிருப்பில் வசிக்கும் ஒன்பது தந்தையர்களுக்கு எளிய முறையில் தலைமுடி பின்னும் பயிலரங்கை நடத்தியுள்ளார். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, மே மாத இறுதியில் அடுத்த அமர்வையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் மீண்டும் பணிக்குத் திரும்பும் எண்ணம் இருந்தாலும், தற்போது தம் பிள்ளைகளுடன் செலவிடும் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார் ஜெகன்.
தனது கணவரின் குழந்தைப் பராமரிப்பைத் தன் சிறுவயது அனுபவத்தோடு ஒப்பிட்ட சம்யுதா, 30 ஆண்டுகளுக்கு முன்பு தந்தைமார்கள் தலை வாரிக்கூட விட்டதில்லை என்று சிரித்தபடி கூறினார்.
முந்தைய தலைமுறையில் தந்தையர் குடும்ப வருமானத்தையும், தாயார் குழந்தைகளையும் கவனித்தனர். ஆனால், இப்போது தந்தையர் பொறுப்பேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
ஆண், பெண் என்று எந்தப் பாகுபாடும் இல்லை என்பதைத் தங்கள் மகள்களுக்குக் கற்பிப்பதாகவும், அதற்குத் தந்தைமார்களே முதல் முன்மாதிரியாகத் திகழ்வது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் நம்புகிறார்.

