செந்தோசா கோ வட்டாரத்திலுள்ள ‘ஒன் டிகிரி 15 மரினா கிளப்’ அருகே சொகுசுப் படகு ஒன்று படகுத்துறை மீது மோதியதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) காலை அப்பகுதியில் நீர், மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றின் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.
படகுத்துறை மீது படகு மோதியதை ‘ஒன் டிகிரி 15 மரினா கிளப்’ நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
“மோதலின் காரணமாக, அதனையொட்டிய பகுதியில் நீர், மின்சாரம், எரிபொருள் சேவைகளுக்குத் தற்காலிகத் தடை ஏற்பட்டது. இருப்பினும், சிறிது நேரத்திலேயே அச்சேவைகள் சீரமைக்கப்பட்டன,” என்று கூறிய நிர்வாகம், இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றது.
மேலும், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் மரினாவின் அன்றாடச் செயல்பாடுகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் நிர்வாகம் குறிப்பிட்டது.
“பாதிக்கப்பட்ட மரினா உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான சேதங்களை ஆய்வு செய்து வருகிறோம்,” என்றும் அது கூறியது.
திங்கட்கிழமை காலை 10.45 மணியளவில் டிக்டாக்கில் ஒரு காணொளியில், மூன்று அடுக்குகள் கொண்ட சொகுசுப் படகு ஒன்று அதன் நிறுத்துமிடத்திற்குப் பின்னோக்கி வருவது தெரிந்தது.
அப்போது, அதிலிருந்து ஏழு பேர் படகிலும் அதன் அருகிலுள்ள படகுத்துறையிலும் பதற்றத்துடன் காணப்பட்டதும் காணொளியில் பதிவானது.


