புலாவ் உபின் தீவில் காணாமல் போன தீயணைப்பு வீரரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவின் வடக்குப்பகுதியில் உள்ள குவாரியின் ஏரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) வீரரின் சடலம் மீட்கப்பட்டது.
மாண்டவர் தெம்பனிஸ் தீயணைப்பு நிலையத்தில் முழுநேர தேசிய சேவையாளராக சேவையாற்றி வந்தார். அவருக்கு 22 வயது.
தீயணைப்பு வீரர் காணாமல்போன சமயத்தில் அவர் பணியில் இல்லை.
ஆடவர் வெள்ளிக்கிழமையிலிருந்து (ஏப்ரல் 14) காணவில்லை.
சனிக்கிழமை அதிகாலை 12:33 மணிக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அதன் பின்னர் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) பிற்பகல் 1 மணிவாக்கில் கெக்கெக் குவாரியிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆரம்பக்கட்ட விசாரணையின் முடிவில் ஆடவரின் மரணத்தில் எந்த சூதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.