வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 6 வயது சிறுவன் மீது வீட்டுக் கூரையிலிருந்து கான்கிரீட் துண்டுகள் பெயர்ந்து விழுந்ததால் அந்தச் சிறுவனின் முதுகில் காயம் ஏற்பட்டது.
இதனைக் குறிப்பிட்டு சிறுவனின் தாயார் ‘சயஷா டேனியல் அலிசா’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவர் பதிவிட்டிருந்த புகைப்படம் ஒன்றில் சிறுவனின் முதுகில் கான்கிரீட் துகள்கள், அழுக்கு ஆகியவற்றுடன் ரத்தக் காயமும் தெரிந்தது.
சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி சயஷா, சேதமடைந்த கூரைப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுவதைக் காட்டும் காணொளிகளை வெளியிட்டு அண்மைய நிலவரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
போலிஸ், வீவக அதிகாரிகள் வீட்டுக்கு வந்து நிலைமையை ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். சிறுவனுக்கு ஊடுகதிர்ப் படம் எடுக்கப்பட்டு, காயத்துக்கு கட்டு போடப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கான்கிரீட் துண்டு கீழே விழுவதற்கு முன்பாக அந்தச் சிறுவன் குழாய் நீரை கூரையின் மீது பீய்ச்சியடித்ததாகச் சொல்லப்படுகிறது. கூரையின் அந்த இடத்தில் ஏற்கெனவே கீறல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூரையில் உள்ள இரும்புக் கம்பிகள் ஈரப்பதம், அமிலத்தன்மை காரணமாக காலப்போக்கில் அரிக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் என்று வீவக குறிப்பிட்டது.
“இது பழைய கட்டடங்களில் நிழக்கூடியது. இந்தக் கட்டடம் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பெரும்பாலும் சமையலறை, குளியலறை போன்ற ஈரப்பதமான இடங்களில் இவ்வாறு நிகழும்,” என்று வீவக குறிப்பிட்டது. ஆனால், இது கட்டடத்திற்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அது தெரிவித்தது.
கீழே விழுந்த கான்கிரீட் துண்டுகளை சுத்தப்படுத்த அந்தக் குடும்பத்தாருக்கு உதவிய வீவக, பராமரிப்புப் பணிகளை நாளை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தது.
இதுபோன்ற குறைபாடுகள் தென்பட்டால், வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் வீவகவைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். கீறல் சிறிய அளவில் இருக்கும்போதே அதனைச் சரிப்படுத்துமாறு வீட்டு உரிமையாளர்களை வீவக் கேட்டுக்கொண்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online