சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களுக்கு பருவமடைதலைத் தாமதப்படுத்துவதற்கான தொலைமருத்துவ ஆலோசனை வழங்க வேண்டாம் என ‘ஜெண்டர் ஜிபி’ (GenderGP) எனப்படும் பிரிட்டிஷ் தொலைமருத்துவ ஆலோசனை சேவை நிறுவனத்திடம் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
வெளிநோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை அதுபோன்று உரிமமின்றி சிங்கப்பூரில் உள்ளோருக்கு அளிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையையும் அமைச்சு விடுத்துள்ளது.
உடலில் பாலியல் சுரப்பிகளை வேலை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தவும் திருநங்கைகளின் பருமடைதல் மாற்றங்களை தாமதப்படுத்தவும் அந்நிறுவனம் சேவை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
அது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சுகாதார அமைச்சிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கேள்வி கேட்டிருந்தது.
அதற்கு புதன்கிழமை (டிசம்பர் 4) பதிலளித்த அமைச்சு, ஜெண்டர்ஜிபி நிறுவனம் தொலைமருத்துவச் சேவை வழங்க, சுகாதாரப் பராமரிப்புச் சேவைச் சட்டம் 2020ன் கீழ் உரிமம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தது.
மேலும், சிங்கப்பூரில் எந்தவொரு சுகாதாரப் பராமரிப்புச் சேவையையும் வழங்க அந்நிறுவனத்திற்கு அனுமதி இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

