ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட 25 வயது நூர்லியானா ஹஸுலியானிக்கு இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதச் சிறைத் தண்டனை வியாழக்கிழமையன்று (அக்டோபர் 3) விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த இச்சம்பவத்தில் இருவர் காயமுற்றனர்.
தன்மீது சுமத்தப்பட்ட தாக்குதல், திருட்டு,போதைப்பொருள் உட்கொண்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை நூர்லியானா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
மோட்டார்சைக்கிள் திருட்டுச் சம்பவம் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட நூர்லியானாவுக்கு 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிணை வழங்கப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மூன்று மாதங்களுக்குப் பிறகு இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.
ஓர் ஆண்டுக்கு எல்லா வகை வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமங்களுக்கு விண்ணப்பிக்கவோ அவற்றை வைத்திருக்கவோ நூர்லியானாவுக்கு அக்டோபர் 3ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது.
இந்தக் கத்திக்குத்து வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது மற்றும் கடைசி நபர் இவர் ஆவார்.


