புக்கிட் பாத்தோக்கில் பிடிஓ வீடுகள் கட்டப்படும் இடத்தில் மண்ணைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கு அந்த நிலப்பகுதியும் கட்டுமானச் சாதனங்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட பிரச்சினைகளும் காரணம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் விளக்கி இருக்கின்றன.
பூமியில் வேலைகள் தொடங்குவதற்கு முன்னதாக மண்ணைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செய்துவிட வேண்டும் என்பதே இந்தத் தொழில்துறையின் பொதுவான நடைமுறையாகும்.
புக்கிட் பாத்தோக் ஹில்சைட் பார்க்கில் பிடிஓ வீடுகள் கட்டப்படும் இடத்தில் அத்தகைய பணிகள், அந்தப் பகுதியின் நிலத்தின் தன்மை காரணமாக கட்டம் கட்டமாக இடம்பெறுகின்றன என்று அவை கூறின. அந்த இடத்தின் சில பகுதிகளில் பிப்ரவரி 7ஆம் தேதி பணிகள் தொடங்கின.
ஒப்பந்தக்காரர்களால் சில பள்ளங்களைக் குறித்த காலத்தில் நிரப்ப முடியவில்லை. இதற்கு அங்கு கட்டுமானச் சாதனங்களைக் கொண்டு செல்வதில் தற்காலிக பிரச்சினைகள் ஏற்பட்டதே காரணம்.
என்றாலும் அவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டு பள்ளங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு விளைவிக்காத மண்ணுடன் கலந்து மக்கிவிடும் பொருள்களால் நிரப்பப்பட்டுவிட்டதாக அறிக்கை கூறியது.