பேருந்தின் கதவிடுக்கில் சிறுமியின் கை சிக்கிக்கொண்டதால், கதவைத் திறக்கக் கோரிய சக பயணிகளைத் தகாத சொற்களால் வசைபாடிய பேருந்து ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் பேருந்து எண் 106ல் நடந்தது எனவும் அந்த 11 வயதுச் சிறுமி கெமிங் தொடக்கப் பள்ளியிலிருந்து புக்கிட் பாத்தோக் பேருந்து முனையம் வரை செல்வதற்காக அப்பேருந்தில் ஏறினார் எனவும் ‘கம்ப்ளைண்ட் சிங்கப்பூர்’ என்னும் ஃபேஸ்புக் பக்கம் வழியாக அச்சிறுமியின் தாயார் செரீன் கிவீ தெரிவித்திருந்தார்.
தன் மகளுடன் பயணம் செய்த சக பயணிகள் கதவைத் திறக்கும்படி பேருந்து ஓட்டுநரை நோக்கி சத்தம் போட்டனர் என்றும் கதவைத் திறந்த பிறகு அப்பேருந்து ஓட்டுநர் பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக அவர்களை இழிசொற்களால் திட்டினார் என்றும் அதில் பயணம் செய்த சக பயணி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகத் திருவாட்டி செரீன் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ‘டவர் டிரான்சிட் சிங்கப்பூர்’ நிறுவனப் பேச்சாளரிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது, அந்தப் பேருந்து ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.