மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு ஜெரமி டான், பிட்காயின் முதலீடுகளைச் சூதாட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசிய எதிர் வேட்பாளருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
அத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பில் போட்டியிடும் கோ ஸி கீ, பிட்காயின் எனும் மின்னிலக்க நாணயத்தில் அரசாங்கம் முதலிடச் செய்வது என்பது போன்ற திரு டானின் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
“இதனைத்தான் நான் சூதாட்டம் என்கிறேன். சூதாட்டத்தில் மசெக நம்பிக்கை கொள்ளாது,” என்று புதன்கிழமை (ஏப்ரல் 30) நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவாட்டி கோ பேசியிருந்தார்.
இந்நிலையில், சுயேச்சை வேட்பாளராக இருந்தபோதும் வியாழக்கிழமை தாமே சொந்தமாக ஒரு பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் திரு டான்.
அப்போது, “சூதாட்டம் என்பது என்ன? முதலில், இங்குள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடியை ஒட்டி ஒரு ‘டோட்டோ கடை’ உள்ளது. ‘தான் அதனை மூடப் போகிறேன்’ என்று எல்லாக் குடியிருப்பாளர்களிடமும் திருவாட்டி கோ சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்.
“அதிலுள்ள இடர் குறித்துப் போதிய அளவு அறிந்துகொள்ளாமல் ஒரு பெரிய முயற்சியில் இறங்குவதுதான் சூதாட்டம்,” என்றார் திரு டான்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மின்னிலக்க நாணய நிறுவனமான எஃப்டிஎக்சில் (FTX) முதலீடு செய்த $377 மில்லியனைத் தெமாசெக் தள்ளுபடி செய்ததையும், பின்னர் எஃப்டிஎக்ஸ் வீழ்ச்சி கண்டதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
மவுண்ட்பேட்டனை மின்னிலக்க நகராக மாற்றுவேன் என்று உறுதியளித்தார் திரு டான்.
தொடர்புடைய செய்திகள்
அப்பேட்டை நிர்வாகம் மற்றும் குடியிருப்பாளர் குழு சந்திப்பு நேரத்தை உறுதிசெய்வதற்கான இப்போதைய மென்பொருள் பழையதாகிவிட்டதால் அது சிங்பாஸுடன் நன்கு ஒருங்கிணையவில்லை என்றும் அவர் சொன்னார். அதனால், அந்த மென்பொருளைத் தான் திருத்தி எழுதுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

