மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் பிறந்த காப்பிபாரா மரணம்

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் பிறந்த காப்பிபாரா மரணம்

1 mins read
149ad563-2806-4862-9ec4-eec231e8c56a
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் இரு காப்பிபாரா குட்டிகள் பிறந்தன. - படம்: மண்டாய் வனவிலங்குக் காப்பகம்/ ஃபேஸ்புக்

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பிறந்த இரண்டு காப்பிபாரா குட்டிகளில் ஒன்று மாண்டுவிட்டது.

அந்தப் பெண் காப்பிபாரா குட்டி, மிக முக்கியமான தொடக்க வாரங்களைக் கடந்து உயிர்பிழைக்கவில்லை என்றும் பிறந்த மூன்று வாரங்களில் ஜனவரி 27ஆம் தேதி மாண்டது என்றும் வியாழக்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட அறிக்கையில் மண்டாய் வனவிலங்குக் காப்பகம் கூறியது.

பத்தாண்டுகளில் மண்டாயில் பிறந்த முதல் காப்பிபாரா குட்டிகள் அவை. காப்பிபாரா தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

இந்நிலையில், மற்றொரு காப்பிபாரா குட்டி ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் பிறப்பில் இருந்த எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக, தற்போது 4.4 கிலோகிராம் எடையில் உள்ளதாகவும் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்தது.

“ஆண் காப்பிபாரா குட்டி நன்றாகச் சாப்பிட்டு, சுறுசுறுப்புடன் ஒவ்வொரு நாளும் தாயுடன் நெருக்கமாகவே உள்ளது,” என்று விலங்குநலப் பராமரிப்பாளர் அஸ்மி அம்ஸா கூறினார்.

பெண் காப்பிபாரா குட்டியைப் பற்றிப் பேசியபோது, “புதிதாகப் பிறந்த குட்டிகளுக்கான பராமரிப்பு சிக்கலாக இருக்கலாம். குறிப்பாக, ஒரு தாய் தனது முதல் குட்டியைப் பராமரிக்கும்போது, அதன் தாய்மை நடத்தையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்,” என்று அவர் சொன்னார்.

தற்போது, தாய்க்கும் உயிர்பிழைத்த குட்டிக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் குழு கவனம் செலுத்தும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்