பிடாடாரி பார்க் டிரைவில் இருக்கும் சாலைச் சந்திப்பில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
வியாழக்கிழமை (நவம்பர் 30) நிகழ்ந்த இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தங்களுக்கு வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
குழாய்களின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது எனவும் இந்தத் தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் அது மேலும் கூறியது.
காரில் எப்படித் தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உட்லீ கடைத்தொகுதி அருகே நீல நிறக் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதையும் அதிலிருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் வெளியாவதையும் பெஹ் சியா லோர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளியில் காண முடிந்தது.