தோபாயோ வீடமைப்பு வட்டாரத்தில் உள்ள திறந்தவெளி கார்நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) மாலை நேரத்தில் ஒரு கார் தீப்பற்றி எரிந்தது.
அதனைப் பார்க்க பொதுமக்கள் பலர் திரண்டனர். அவர்களில் பல சிறுவர்களும் இருந்தனர்.
புளோக் 148, தோபாயோ லோரோங் 1ல் உள்ள கார் நிறுத்தத்தில் அன்றைய தினம் மாலை 6 மணியளவில் தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.
வாகனத்தின் இயந்திரம் இருக்கும் பகுதியில் தீப்பிடித்ததாகவும் அதனை நீர் குழாய் வழி அணைத்துவிட்டதாகவும் எஸ்சிடிஎஃப் கூறியது.
யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. விசாரணை தொடர்கிறது என்று எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.
காரின் முன்பாகத்தில் தீ எரிவதையும் பெருமளவு கறும்புகை அதிலிருந்து கிளம்புவதையும் டிக்டாக் சமூக ஊடகத்தில் ஒருவரால் பகிரப்பட்டக் காணொளி காட்டியது.
அந்த காணொளியில் பொதுமக்கள் திரண்டிருப்பதும் தீயைப் பற்றி சிறுவர்கள் உரையாடுவதும் மற்றொரு குழந்தையின் அழுகுரலும் பின்புலத்தில் கேட்டது.
தீயணைப்புப் படை வருவதற்கு முன், பச்சை நிறச் சட்டையில் ஆடவர் ஒருவர் தீயணைப்புக் கருவியுடன் நெருப்பை அணைக்க முயல்வதும் காணொளியில் பதிவாகியது.
பள்ளிச் சீருடையில் சில மாணவர்களும் கூட்டத்தில் காணப்பட்டனர்.


