பீஷானில் வாகன நிறுத்துமிடத்திற்குப் பின்புறம் உள்ள மேடான சாய்வுதளத்தில் கெட்கோ காரை நிறுத்திய சந்தேகத்தின் தொடர்பில் 49 வயது ஆடவர் ஒருவர் காவல்துறையின் விசாரணையில் உதவி வருகிறார்.
பீஷான் ஸ்திரீட் 22ல் உள்ள புளோக் 248ல் வியாழக்கிழமை (ஜனவரி 22) மாலை 4.30 மணியளவில் சம்பவம் நடந்ததாகத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது.
கெட்கோ நிறுவனம், கார் பகிர்வுச் சேவைகளை வழங்குகிறது.
எஸ்ஜிஆர்வி அட்மின் ஃபேஸ்புக் பக்கத்தில் சம்பவத்தின் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாகக் கார்களை நிறுத்தும்போது பின் சக்கரங்கள் குறிப்பிட்ட இடத்திற்குப் பின்னால் போய்விடாமல் இருப்பதை உறுதிசெய்ய இரண்டு சிறிய காங்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கும். அதன் பின்புறம் கார் சாய்வுதளத்தில் நிற்கிறது. காங்கிரீட் தடுப்புகள் அதன் முன் சக்கரங்களைத் தடுத்து நிறுத்துகின்றன.
காரின் முன்பக்கம், இழுவை வாகனமொன்று நின்றுகொண்டிருக்கிறது. காவல்துறை காரும் அதிகாரிகளும் அங்கிருப்பதைக் காணமுடிகிறது.
சம்பவம் குறித்து கெட்கோ நிறுவனத்தை அணுகியது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.
“சம்பவம் பற்றி நாங்கள் அறிவோம். விசாரணை நடைபெறுவதால், தற்போது மேல் விவரங்களைத் தரும் நிலையில் நாங்கள் இல்லை,” என்று கெட்கோ நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
“கெட்கோவைப் பொறுத்தவரை, பயனீட்டாளர்கள், சமூகத்தினரின் பாதுகாப்பை நாங்கள் மிகவும் முக்கியமாகக் கருதுகிறோம். அதை உறுதிசெய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஆதரவை நல்குவதற்குமே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்,” என்று அவர் சொன்னார்.

