வியாழக்கிழமை (ஜூலை 31) இரவு 9.30 மணிக்கு நடைபெறவிருக்கும் டோட்டோ குலுக்கலில் ஏறக்குறைய $10 மில்லியன் முதல் பரிசு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று குலுக்கல்களில் யாரும் பரிசை வெல்லாததால் பரிசுத் தொகை இவ்வாறு கூடியுள்ளது.
ஜூலை 21ஆம் தேதி, ‘குரூப் 1’ பிரிவில் ஏறக்குறைய $1.2 மில்லியனாக இருந்த பரிசுத்தொகை ஜூலை 24ஆம் தேதி, $2.9 மில்லியனாக அதிகரித்தது என்று ‘சிங்கப்பூர் பூல்ஸ்’ தெரிவித்தது.
பின்னர் ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலிலும் யாரும் பரிசு வெல்லாததால் அந்தத் தொகை ஏறத்தாழ $5.8 மில்லியனானது.
ஜூலை 31ஆம் தேதி நடைபெறவிருக்கும் குலுக்கலில் இரவு 9 மணி வரை பங்கேற்க முடியும்.
டோட்டோ விதிமுறைகளின்கீழ், ‘குரூப் 1’ல் தொடர்ச்சியாக யாரும் பரிசு வெல்லாவிட்டால் நான்காவது குலுக்கல் வரை மட்டுமே பரிசுத் தொகை அதிகரிக்கும். அதன் பிறகு ‘குரூப் 2’ல் வெற்றி பெறுபவர்களுக்கு அந்தப் பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.
இந்த ஆண்டு (2025) எட்டாவது முறையாக ஜூலை 31ஆம் தேதி குலுக்கலில் டோட்டோ பரிசுத் தொகை $10 மில்லியனைக் கடந்துள்ளது.
முன்னதாக, ஜனவரி 3, ஜனவரி 24, பிப்ரவரி 7, மார்ச் 6, ஏப்ரல் 28, ஜூன் 19, ஜூலை 17 ஆகிய தேதிகளில் $10 மில்லியனுக்கும் அதிகமான பரிசுத்தொகைக்காக டோட்டோ குலுக்கல் இடம்பெற்றது.