சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையத்தில் சுரங்கப்பாதைகள் கட்டுமானப் பணிகளுக்கு $999 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய நிறுவனமான ‘பென்டா-ஓஷன் கன்ஸ்ட்ரக்ஷன்’, உள்ளூர் கட்டுமான, பொறியியல் நிறுவனமான ‘கோ பிரதர்ஸ் எக்கோ இன்ஜினியரிங்’கின் துணை நிறுவனத்திற்கும் அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஐந்தாம் முனையத்திற்கான சுரங்கப்பாதைகளை அமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 10) தெரிவித்தது.
பயணிகளையும் அவர்களின் பொருள்களையும் முனையத்தின் சுரங்கப்பாதைகள் வழியாகக் கொண்டுசெல்வதையும் பொதுவான மற்ற நடவடிக்கைகளுக்கு வழித்தடங்களைப் பயன்படுத்துவதையும் அது ஆதரிக்கும் எனக் குழுமம் மேலும் கூறியது.
இத்திட்டம் முடிவடைய நான்கு ஆண்டுகளுக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றோட்டமான கட்டடம், எதிர்காலத்தில் சுரங்கப்பாதைகளின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை அத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.