சிங்கப்பூரில் ஷைன் குழந்தைகள், இளையர் அறநிறுவனம் போல பல அறநிறுவனங்கள் தொண்டூழியர்களை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் அதிக பலன்களை பெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அந்த நன்மை கிடைப்பதாக அறநிறுவனங்கள் கூறுகின்றன.
இதன்மூலம் தொண்டூழியர்களை ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு மட்டுமில்லாமல் பல்வேறு தொண்டூழியத்திற்குப் பயன்படுத்த முடிவதாகக் கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டு தேசியச் சமூகச் சேவை மன்றம் தொண்டூழியர் மேலாண்மைக்கான திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு அதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
தொண்டூழியர் மேலாண்மைக்கான திட்டத்தில் தொண்டூழியர்களுக்கான மேலாளர்களை வேலைக்கு எடுப்பது, தொண்டூழியர்களின் திறன்களை வளர்ப்பது, அறநிறுவனங்களுக்கு தொண்டூழியர்கள் எவ்வளவு முக்கியம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் செயிண்ட் லூக்ஸ் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் தொண்டூழியர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது.
“எங்கள் நிலையத்திற்கு 3,000க்கும் அதிகமான தொண்டூழியர்கள் உதவினர். அதன் மூலம் அதன் சேவைத் திறன் அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் வழிகாட்டுதல் தான்,” என்று செயிண்ட் லூக்ஸ் முதியோர் பராமரிப்பு நிலையம் தெரிவித்தது.

