கட்டடங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை குறியீடு மறுபரிசீலனைச் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் வரைவு, 2024ஆம் ஆண்டின் இறுதியில் பொதுமக்களின் கருத்தறிவதற்கு வெளியிடப்படவிருக்கிறது.
கட்டட, கட்டுமான ஆணையத்தின் அந்த குறியீடு கடைசியாக 2019ஆம் ஆண்டில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
உடற்குறையுள்ளோர், குழந்தைகளுடன்கூடிய குடும்பங்கள் அணுகக்கூடிய வகையில் அடிப்படை வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் தேவைகள் இருப்பதை குறியீடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 16) பேசிய நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா, திருத்தப்பட்ட குறியீட்டின் வரைவு, பொதுமக்களின் ஆலோசனையைப் பெறுவதற்காக 2024ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் என்றார்.
பீஷான்-தோபாயோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட், தள்ளுவண்டி குழந்தைகளின் குடும்பங்கள், சக்கரநாற்காலி மற்றும் தனிநபர் நடமாட்ட சாதனங்களின் உதவியுடன் பயணம் செய்பவர்களுக்கு கட்டடங்களில் உள்ள வசதிகள் பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் இந்திராணி ராஜா, கட்டடங்களில் குறைந்தது ஒரு மின்தூக்கி சக்கர நாற்காலி பயன்படுத்துவதற்கு இருக்க வேண்டும் என்று தற்போதைய குறியீடு குறிப்பிடுகிறது என்றார்.
இத்தகைய மின்தூக்கியில் சக்கரநாற்காலி பயணிகள் பயணம் செய்வதற்கு போதுமான இடம் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வசதியாக எட்டும் தொலைவில் பொத்தான்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் மக்கள் அதிக நடமாட்டமுள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள், மேம்பாட்டாளர்கள் அடிப்படை குறியீட்டுக்கு அப்பாலும் வசதிகளைச் செய்யலாம் என்று கட்டட, கட்டுமான ஆணையம் ஊக்கமூட்டுகிறது.