‘காம்லிங்க்+’ அரசாங்க உதவித் திட்டத்தில் உள்ள குடும்பங்களில், நாள்பட்ட நோய்ப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
நிதி நெருக்கடி, சுகாதார குறித்து குறைவான விழிப்புணர்வு, சுகாதார அமைப்பைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை மோசமான சுகாதார விளைவுகளுக்குக் காரணங்களாக அமைந்து, அவர்களின் அன்றாட சவால்களை மேலும் கடினமாக்குகின்றன.
இந்நிலையில், 2027லிருந்து 25 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட காம்லிங்க்+ குடியிருப்பாளர்கள், ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்திற்குப் பதிவுசெய்து கொள்ளலாம்.
இதன்மூலம், நம்பிக்கைக்குரிய குடும்ப மருத்துவரிடமிருந்து தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பு, பரிசோதனைக்கான மானியம், தடுப்பூசி போன்றவற்றைப் பெற்று மேலும் பல காம்லிங்க்+ குடியிருப்பாளர்கள் பயனடையலாம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
காம்லிங்க்+ திட்டத்தில் உள்ள 25 வயதுக்குட்பட்டோரின் சுகாதாரத் தேவைகளுக்கு இதர திட்டங்கள் மூலம் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும்.
குடும்ப வழிகாட்டிகள், ஆக்ககரமான சுகாதாரப் பழக்கவழக்கங்களை நோக்கி குடும்பங்களை ஊக்குவித்தல், அடிப்படைச் சுகாதாரத் தகவல்களைப் பகிர்தல், அவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்த குடும்பங்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்தின் ஒட்டுமொத்த செயல்திட்டங்களிலும் தேவையான சுகாதார நடவடிக்கைகளையும் அவர்கள் ஒருங்கிணைப்பார்கள்.
தொடர்புடைய செய்திகள்
சிக்கலான சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, குடும்ப வழிகாட்டிகள் கூடுதல் உதவி வழங்குவார்கள்.

