கத்தியேந்திய ஆடவரை மடக்கிப் பிடித்தவரின் துணிகரச் செயலுக்குப் பாராட்டு

கத்தியேந்திய ஆடவரை மடக்கிப் பிடித்தவரின் துணிகரச் செயலுக்குப் பாராட்டு

2 mins read
56dcb73f-2a81-46c7-bf45-c4331c5a4b4a
கத்தியால் தனக்குத்தானே தீங்கு விளைவித்துக்கொள்ள முயன்ற ஒருவரைத் தடுத்து நிறுத்தினார் ஒஸ்மான் சிடின். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கிளமெண்டி மால் கடைத்தொகுதிக்கு வெளியே ஆகஸ்ட் 10ஆம் தேதி கூச்சல் சத்தம் கேட்டபோது, வெளியே ஏதோ இசை நிகழ்ச்சி நடப்பதாகவே துப்புரவாளர்களான ஒஸ்மான் சிடினும் அவருடைய மனைவியும் நினைத்தனர். இருப்பினும், “ஓடுங்கள்! ஓடுங்கள்!” என மக்கள் அலறியதைக் கேட்ட திரு ஒஸ்மான், 56, ஆடவர் ஒருவர் கத்தியால் தன்னைத் தானே குத்திக்கொண்டிருந்ததையும் கண்டார். உடனே, தம் மனைவியிடம் தமது உடைமைகளைக் கொடுத்துவிட்டு, சற்றும் யோசிக்காமல் அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்தினார். அங்கு சிறார்கள் உட்பட பலரும் ஓடிக்கொண்டிருந்ததால், அந்த ஆடவர் பிள்ளைகளைக் காயப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே அவரை மடக்கிப் பிடிக்க விரைந்ததாக ஒஸ்மான் கூறினார். அவர் அந்த ஆடவரைக் கீழே தள்ளி, மடக்கிப் பிடித்துக் கட்டுப்படுத்தினார். இதில், டுரியான் வெட்டும் கத்திபோல தெரிந்த அந்த ஆயுதம் சற்று தூரத்தில் போய் விழுந்தது. தன் சட்டை முழுவதும் ரத்தக் கறையாக இருந்தபோதிலும், கத்தியை தள்ளிப் போடுமாறு திரு ஒஸ்மான் அங்கிருந்தவர்களிடம் கூச்சலிட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த 34 வயது ஆடவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் திரு ஒஸ்மானின் வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதுடன், ஆடைமீது ரத்தம் படிந்தது. தாம் கற்ற தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி அந்த ஆடவரைக் தடுத்து நிறுத்தியதாகக் கூறிய திரு ஒஸ்மான், சமூகத்திற்கு நன்மை செய்வதே தமக்கு முக்கியம் என்றார். இதற்கிடையே, ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஹோ, திரு ஒஸ்மானின் துணிச்சலான இச்செயலைப் பாராட்டியுள்ளார். அத்துடன், குடியிருப்பாளர்கள் திரட்டிய நிதியுதவியையும் அவரிடம் ஒப்படைத்த திரு ஹோ, தமது குழுவினர் திரு ஒஸ்மானுக்கு மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்