உலகில் தற்போது நிலவும் நிச்சயமற்ற சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி வெளிநாடுகளில் கிளைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களைச் சிங்கப்பூர் நிறுவனங்கள் வகுக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் எப்போது முடிவுக்குவரும் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் நிறுவனங்கள் அவ்வாறு செய்வது முக்கியம் என்றார் அவர்.
திரு கான் புதன்கிழமை (மார்ச் 25) தொடங்கி சனிக்கிழமை வரை ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவதும் பொருளியல் உறவை வலுப்படுத்துவதும் அவரது பயணத்தின் நோக்கம்.
ஜெர்மனிக்குச் செல்லும் முன்னர் ஊடகங்களைச் சந்தித்த அவர், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று திரு கான் வலியுறுத்தினார்.
“சிங்கப்பூர்ப் பொருளியல் மிகவும் சிறியது என்பதைத் தற்போதைய நிலைமை நமக்கு நினைவூட்டுகிறது. வெளிப்புறக் காரணிகளுக்கும் நிச்சயமற்ற நிலைக்கும் நாம் உட்பட்டிருக்கிறோம். அவை நமது பொருளியலை உலுக்கக்கூடும்,” என்று அவர் எச்சரித்தார்.
அதனால் சிங்கப்பூர் அதன் பொருளியல் நடவடிக்கைகளை எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்துவது அவசியம் என்றார் துணைப் பிரதமர் கான்.

