கொவிட்-19 பெருந்தொற்று, பணியிடத்தில் ஊழியர்களின் மனநலத்திலும் உடல்நலத்திலும் கவனம் செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்கள் மனநலமும் உடல்நலமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அல்ல என்பதை நன்கு புரிந்துகொண்டு அதைப் பேணுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன.
உடற்பயிற்சிக் கூடங்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குவது, பல் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற நல உதவிகளைத் தவிர்த்து, சிங்கப்பூரில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் வேறு சில நல உதவிகளில் சுயகவனிப்பு பயன்பாடுகள், மனநலத்திற்கான பெருநிறுவனக் காப்பீடு ஆகியவை அடங்கும்.
ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை, மருந்துகள், சிகிச்சை வழங்குவது போன்றவை ஓசிபிசி வங்கியின் புறநோயாளி மருத்துவத் திட்டத்தில் அடங்கும் என அவ்வங்கியின் மனித வளத்துறைத் தலைவர் லீ ஹுவீ பூன் கூறினார்.
மேலும், அவ்வங்கியின் உள்நோயாளி, அறுவை சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட மனநலப் பயிற்சியாளர் அல்லது பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரால் வழங்கப்படும் உள்நோயாளிக்கான மனநல சிகிச்சையும் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
“நிறுவனத்தின் மருத்துவ நல உதவி திட்டத்தில் மனநலம், உளவியல் தொடர்பான பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெறுவதும் அடங்கும்,” என அமேசானின் அனைத்துலக நல உதவிக்கான தலைவர் துஷ்யந்த் அஜ்வானி தெரிவித்தார். மேலும் வாழ்க்கைப் பயிற்சி, ஆலோசனை அமர்வுகள், உயிர்மாய்ப்பைத் தடுப்பதற்கான உதவி, உரிமம் பெற்ற மனநல மருத்துவரிடம் 24 மணிநேர ஆலோசனை போன்ற நல உதவிகளைத் தங்கள் ஊழியர்களுக்குத் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் வழங்குவதாகவும் அவர் சொன்னார்.