மூன்று வயது முதலே பெற்றோருடன் தொண்டாற்றிய 10 வயதுச் சிறுமிக்கு கருணைக்கான விருது.
சியா ஸீ என் தமது மூன்று வயதிலேயே தம் பெற்றோருடன் மெக்பர்சனில் உள்ள வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்த குடிமக்களைச் சந்தித்து, ‘லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ்’ அமைப்பின் தொண்டூழியப் பணியின் ஒரு பகுதியாக அவர்களிடம் நலன் விசாரித்து வந்தார்.
ஏழு வயதில், சமூக சேவைத் துறையில் பணிபுரியும் தம் தாயாரால் ஈர்க்கப்பட்டு, சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தில் தமது முறையான தொண்டூழியப் பயணத்தைத் தொடங்கினார்.
அங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் சங்கத்தின் நிதி திரட்டும் ஓட்டங்களான ‘ரிலே ஃபார் லைஃப்’, ‘ரேஸ் அகெயின்ஸ்ட் கேன்சர்’ மற்றும் ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினம்’ போன்ற பிற நிகழ்வுகளில் ஏற்பாடு செய்தல், பொட்டலமிடுதல், பதிவுசெய்தல் ஆகியவற்றில் அவர் உதவினார்.
நிதி திரட்டும் ஓட்டங்களில் ஒன்று, புற்றுநோயாளிகளுக்காக $8,000க்குமேல் நிதி திரட்ட உதவியது.
டாவ் நான் பள்ளி மாணவியான ஸீ என், 37 பள்ளிகளைச் சேர்ந்த 84 இளம் தனிநபர்களில் ஒருவராக சனிக்கிழமை (ஜூலை 5) ‘சிங்கப்பூர் சைலண்ட் ஹீரோஸ்’ மாணவர் விருதைப் பெற்றார்.
சிங்கப்பூர் குடிமக்கள் சங்கத்தால் 2023ல் தொடங்கப்பட்ட இந்த விருது பரிவு, சுயநலமின்மை, மனவுறுதியுடன் முன்னின்று செயல்பட்ட மாணவர்களை அங்கீகரிக்கிறது.
இந்த அறியப்படாத நாயகர்கள் தங்கள் சமூகங்களுக்குச் சேவை செய்வதில் பல சாதனைகளைச் செய்துள்ளனர். நன்கொடை திரட்டுவது, மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிப்பது முதல் மனநல விழிப்புணர்வை ஊக்குவிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஆதரவளிப்பது வரை இவை அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்பிரிங் சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய கல்வி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ், “நன்மை என்பது பெரிய சைகைகளில் மட்டுமல்ல, சிறிய தனிப்பட்ட கனிவன்புச் செயல்களிலும் வெளிப்படுகிறது,” என்றார்.
“இது நம் பெற்றோர், கல்வியாளர்களிடமிருந்து வரும் ஆரம்ப வழிகாட்டுதலில் இருந்து தொடங்குகிறது, அவர்கள் பரிவு, மரியாதை, பொறுப்புணர்வு ஆகிய பண்புலன்களை நமக்குள் புகுத்துகிறார்கள்.
“அமைதியான கருணை வேரூன்றி செழிக்கக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த நாம் அனைவரும் தொடர்ந்து பணியாற்றினால், நாம் இணைந்து ஒரு கனிவன்புமிக்க, வலிமையான அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப முடியும்,” என்றார் அவர்.

