சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்லைன்ஸ் இரு விமானச் சேவை நிறுவனங்களும் ஒத்துழைப்பது குறித்து தங்களுக்கு இடையிலான கவலை தரும் அம்சங்களை சரிசெய்துள்ளன.
இதைத் தொடர்ந்து இரு தரப்பு ஒத்துழைப்புக்கு சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 7) நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இவ்விரு நிறுவனங்களும் கூட்டு முயற்சி அடிப்படையில், விமானச் சேவை அட்டவணை, கட்டணம், விற்பனை, சந்தைப்படுத்தல், ஒன்று மற்றொன்றுடன் விமான பயணச் சேவையைப் பரிமாறிக் கொள்ளும் குறியீட்டு முறை ஆகிய தொடர்பில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இதன் மூலம் இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயும் ஐரோப்பிய நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்குடன் செயல்பட்டன.
இதைத் தொடர்ந்து கொவிட் கொள்ளைநோய் காலத்தில் சந்தை நிலையைப் பொறுத்து ஆணையம் 2022ஆம் ஆண்டு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளித்தது.
இதில் ஒரு முக்கிய நிபந்தனை விமானப் போக்குவரத்துத் துறை மீண்டவுடன் இரு விமானச் சேவை நிறுவனங்களும் தங்கள் திட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது.