அடுத்த ஆண்டிலிருந்து உயர்நிலை மூன்று, நான்கில் பயிலும் அனைத்து மாணவர்களும் கணிமைப் பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்வுசெய்ய முடியும். மின்னிலக்க, கணினித் திறனை மாணவர்கள் வளர்த்துகொள்ள வேண்டிய அவசியம் அதிகரித்து வருவதால் அந்த முடிவு எடுக்கப்படுகிறது.
இதற்குமுன் ஜி3 மாணவர்கள் அல்லது விரைவுப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட கணிமை பாடத்தை இனி ஜி2 மாணவர்களும் பயிலலாம்.
கணிமைப் பாடத்திட்டம் கணிமைத் திறனை மாணவர்களிடையே வளர்க்க உதவுவதுடன் இணையப் பாதுகாப்பு, உருமாறும் தொழில்நுட்பம், கணிமையின் தாக்கம் ஆகியவை குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது என்றார் கல்வியமைச்சின் பாடத்திட்ட, மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் ஓங் கோங் ஹோங்.
ஜி1 கணிமைப் பாடம் கணினிப் பயிற்சி (சிபிஏ) பாடத்துக்குப் பதிலாக வழங்கப்படும். அந்தப் பாடம் கடந்த ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டது.
ஏறக்குறைய 60 பள்ளிகளைச் சேர்ந்த 1,300 மாணவர்கள் தற்போது சாதாரண நிலை கணிமைப் பாடத்தைக் கற்கின்றனர். அது இனி ஜி3 கணிமைப் பாடம் என்று அறியப்படும்.
இவ்வாண்டு தொடங்கிய முன்னோடித் திட்டத்தின் ஓர் அங்கமாக உயர்நிலை மூன்றில் பயிலும் கிட்டத்தட்ட 90 மாணவர்களுக்குப் பள்ளி அடிப்படையிலான நிலையங்களில் அந்தப் பாடம் கற்பிக்கப்படுகிறது.
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கணிமை தொடர்பான சிந்திக்கும் திறனை ஜி2 கணிமைப் பாடம் வளர்க்க உதவும் என்றார் திரு ஓங்.
ஜி1 கணிமைப் பாடங்களைக் கற்கும் மாணவர்கள் மேகக் கணிமை, செயற்கை நுண்ணறிவு போன்ற அதிகரித்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்வர்.
தொடர்புடைய செய்திகள்
ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அண்மையில் நடத்திய ஆய்வொன்றில் உயர்நிலை இரண்டில் பயிலும் 60க்கும் அதிகமான மாணவர்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் காணும் ஜி2 கணிமைப் பாடத்தில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது.
ஆய்வு முடிவுகளின்படி கிட்டத்தட்ட 30 மாணவர்கள் ஜி1 கணிமை பாடத்தைக் கற்றுகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20க்கும் அதிகமானோர் ஜி3 கணிமை பாடத்தில் இணையவிருக்கின்றனர்.