கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் சிங்கப்பூரின் அணுகுமுறை ‘தங்கத் தரம்’ என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு சிங்கப்பூரை ஆய்வாளர்கள் அடையாளக் குறியீடாக வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
கொவிட்-19 தொற்றைக் கண்டுபிடிப்பதில் சிங்கப்பூர் பயன்படுத்தும் உத்திகளை மற்ற நாடுகளும் பின்பற்றினால், உலக அளவில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைப்போல 2.8 மடங்கு அதிகமான கிருமித் தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.
“பிப்ரவரி மாதம் 4ஆம் தேதிக்குள் சிங்கப்பூரில் 18 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ‘தங்கத் தரம்’ அல்லது கிட்டத்தட்ட நிறைவான கண்டுபிடிப்பு,” என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் டி.எச்.சான் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த 4 ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ள நாடுகள் சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில், கிருமித்தொற்று ஏற்பட்ட 40 விழுக்காட்டினரை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததாக அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டது.
கண்காணிப்பு குறைந்த நாடுகளில் அந்த அளவு 11% மட்டுமே என்பது ஆய்வாளர்களின் முடிவு.
medRxiv இணைய சுகாதார அறிவியல் தளத்தில் இந்த ஆய்வு முடிவு பதிவேற்றப்பட்டிருந்தது.
#கொரோனா #சிங்கப்பூர் #தங்கத்தரம் #தமிழ்முரசு