கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், சில மாதங்களுக்கு ஒருமுறை நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கலாம் என்பதே யதார்த்தமான நீண்டகால உத்தியாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா நோய்ப் பரவல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வரும் தொடரின் ஓர் அங்கமாக, லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளி ஓர் இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்து இருந்தது.
அதில் கலந்துகொண்டு பேசிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங், இந்த ஒரு மாதகால நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தை அடுத்து, இன்னும் ஓரிரு வாரங்களில் சமூக அளவிலான கிருமிப் பரவல் குறையக்கூடும் என்று கூறியிருக்கிறார்.
சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு மீண்டு வருவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படி நோய்ப் பரவல் முறியடிப்பிற்கான அதிரடித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் பேராசிரியர் டியோ சொன்னார்.
கொரோனா கிருமி பரவும் தன்மை, உண்மையான மரண விகிதம் தொடர்பான கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை என்றார் பேராசிரியர் டிக்கி பாஞ்செஸ்டு.
வெவ்வேறான நிர்வாக முறைகளாலும் உலகளவில் போதிய அளவிற்கு ஒருங்கிணைந்து செயல்படாததாலும் கொரோனா கிருமித்தொற்றுப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் எனக் கணிப்பது சிரமமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.