தங்களுடைய உடற்பயிற்சிக் கூடங்கள் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படும்போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்று ‘சாஃப்ரா’ நிறுவனம் இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகான இரண்டாவது கட்டத் தளர்வு ஜூன் 19 முதல் நடப்புக்கு வரும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பான இடைவெளி, SafeEntry போன்ற பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன், சாஃப்ரா மன்றங்களுக்குள் இருக்கும் EnergyOne உடற்பயிற்சிக் கூடங்களில் கிருமிநாசினி பூச்சு ஒன்று, கூடத்தில் உள்ள அனைத்து சாதனங்களின் மீதும், வாடிக்கையாளர்கள் பொதுவாகத் தொடும் இடங்களிலும் பூசப்படும்.
பார்வையாளர்களின் காலணிகளில் உள்ள கிருமியைக் கொல்லும் நோக்கில் கிருமிநாசினி விரிப்பான்கள் உடற்பயிற்சிக் கூடங்களின் வாயிலில் விரிக்கப்படும்.
பயன்பாட்டுக்குப் பிறகு சாதனங்களைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி துடைப்பான்களும் பயனாளர்களுக்கு வழங்கப்படும்.
மூச்சுத் துளிகள் பரவுவதைத் தடுக்கும் விதத்திலான தடுப்புக் கேடயங்களை சோதனை முயற்சியாக சாஃப்ரா பொங்கோல் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கத் திட்டமிடுகிறது. அதனை மறு ஆய்வு செய்து தமது மற்ற உடற்பயிற்சிக் கூடங்களுக்கும் அது விரிவுபடுத்தக்கூடும்.
மவுன்ட் ஃபேபர், ஜூரோங், பொங்கோல், தெம்பனிஸ், தோ பாயோ, ஈசூன் ஆகிய இடங்களில் சாஃப்ரா மன்றங்கள் செயல்படுகின்றன.
விளையாட்டுக் கூடங்கள், நீச்சள் வளாகங்கள், விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பவுலிங் நிலையங்கள் போன்ற விளையாட்டு வசதிகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online