ஈசூன் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் 58 வயது ஆடவரது சடலம், ஜூலை 12ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்தவர் அந்த வீட்டில் ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குத்தான் வசித்துவந்ததாக அண்டைவீட்டார் ‘ஷின் மின் டெய்லி நியூஸ்’ செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
ஆடவர் நட்பாகப் பழகும் இயல்புடையவர் என்றும் கூறப்பட்டது.
ஆடவருக்கு சுகாதாரப் பிரச்சினைகள் ஏதும் இருந்ததாகத் தங்களுக்குத் தெரியவில்லை என்றும் அண்டைவீட்டார் குறிப்பிட்டனர்.
இருப்பினும், தூங்குவதற்கு அவர் சிரமப்பட்டதாகத் தங்களிடம் கூறியுள்ளார் என்றனர்.
இதன் காரணமாக ஆடவர் மதுபானம் அருந்துவார் என்றும் அறியப்படுகிறது.
தமது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய அண்டைவீட்டுக்காரர் ஒருவர், விசித்திரமான நாற்றம் வருவதை உணர்ந்தார்.
அது கருவாடு நாற்றம் போல் தமக்குத் தோன்றியதாகவும் அப்பகுதியில் யாரோ அதைச் சமைக்கிறார் என்றும் அவர் நினைத்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இன்னொரு அண்டைவீட்டுக்காரருக்கும் சந்தேகம் எழவே, 58 வயது ஆடவரது வீட்டிலிருந்து நாற்றம் வருவதை இருவரும் உறுதிப்படுத்தினர்.
காவல்துறைக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆடவரது மரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடந்துவருகிறது.