பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடொன்றில் கணவனும் மனைவியும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) காலை மாண்டுகிடக்கக் காணப்பட்டனர்.
வீட்டின் தரையில் ரத்தத்தைக் காணமுடிந்தது. மாண்ட ஆடவருக்கு வயது 71. மனைவிக்கு வயது 66 என்று காவல்துறை தெரிவித்தது.
நார்த்ஷோர் டிரைவ் வீவக புளோக் 408Bன் 10வது தளத்தில் உள்ள வீட்டில் காலை 6.25 மணிக்கு அவர்கள் மாண்டுகிடந்தனர் என்று சாவ்பாவ் ஊடகம் தெரிவித்தது.
அதிகாரிகள் சென்றபோது வீட்டில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் நினைவின்றி கிடந்ததைக் கண்டனர் என்று காவல்துறை தெரிவித்தது. அவர்கள் மாண்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் ஒருவர் பின்னர் உறுதிப்படுத்தினார்.
இவை இயற்கைக்கு மாறான மரணங்கள் என்று காவல்துறை வகைப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட வீட்டுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.25 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரில் சென்றபோது அங்கு வாசலில் குறைந்தது நான்கு காவல்துறை விசாரணை அதிகாரிகள் இருந்தனர். 12.40 மணியளவில் சீருடைக்குப் பதிலாக சாதாரண உடை அணிந்திருந்த மேலும் இரு விசாரணை அதிகாரிகள் அங்கு வந்தனர்.
மாண்ட தம்பதியின் வளர்ப்பு மகன் அவ்வீட்டுக்குப் பிற்பகல் 2.10 மணியளவில் வந்தார். அவர் தனது பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை.

