செந்தோசா கோவ் கடற்பகுதியில் தென்பட்ட முதலை பிடிக்கப்பட்டு கருணைக்கொலை செய்யப்பட்டது

செந்தோசா கோவ் கடற்பகுதியில் தென்பட்ட முதலை பிடிக்கப்பட்டு கருணைக்கொலை செய்யப்பட்டது

1 mins read
608e8166-5450-4a53-a4ad-43d15a7e4ad4
மே 6ஆம் தேதி இரவு 9 மணியளவில் செந்தோசா கோவ் கடற்பகுதியில் தேசியப் பூங்காக் கழக ஒப்பந்ததாரர்களால் முதலை பொறிவைத்துப் பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகக் கழகம் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செந்தோசா கோவ் கடற்பகுதியில் புதன்கிழமையன்று (மே 6) மாலை தென்பட்ட முதலை பிடிக்கப்பட்டு கருணைக்கொலை செய்யப்பட்டது.

மே 6ஆம் தேதி இரவு 9 மணியளவில் செந்தோசா கோவ் கடற்பகுதியில் தேசியப் பூங்காக் கழக ஒப்பந்ததாரர்களால் அந்த முதலை பொறிவைத்துப் பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகக் கழகம் கூறியது.

ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளமுள்ள அந்த முதலைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு மனிதாபிமான முறையில் கருணைக்கொலை செய்யப்பட்டது என்று கழகத்தின் வனவிலங்கு மேலாண்மைப் பிரிவு இயக்குநர் ஹாவ் சூன் பெங் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அதனை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது கிட்டத்தட்ட 20 முதலைகள் இருக்கும் சுங்கை புலோ சதுப்புநிலப் பகுதி, பிடிபட்ட முதலையை விடுவிப்பதற்கு ஏற்ற இடமல்ல என்று கூறிய திரு ஹவ், 2021ஆம் ஆண்டில் பூங்காக் கழகம் ஒரு சிறிய முதலையை அங்கு மாற்றியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

முதலையை வேறு இடத்திற்கு மாற்றுவது, அது மீண்டும் பிடிபட்ட இடத்திற்கே திரும்புவதற்கான அபாயத்தைக் கொண்டுள்ளது. இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் திரு ஹாவ் மேலும் கூறினார்.

முதலையைத் தங்கள் பராமரிப்பில் ஏற்றுக்கொள்ள முடியுமா என கழகம், மண்டாய் வனவிலங்கு குழுமத்திடம் கேட்டறிந்ததாகவும் ஆனால், அக்குழுமத்தினால் அதனை ஏற்க இயலவில்லை என்றும் திரு ஹாவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்